மதுரை அவனியாபுரம் பகுதியில் கார்த்திக் என்பவர் நேற்று (ஜூன் 1)தனது வீட்டின் சமையலறையில் உணவு சமைப்பதற்காக சென்று உள்ளார். தோசை மாவுடன் அடுப்பு அருகே சென்றபோது அவரது கேஸ் அடுப்பு அடியில் பாம்பு "உஸ்" "உஸ்" என்று சீறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்து கீழே குனிந்து பார்த்தபோது அடுப்புக்கு அடியில் கதகதப்பாக பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை பார்த்து மிரண்டு போய் உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாபு கேஸ் அடுப்பின் அடியில் இருந்த மூன்று அடி நீள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார். வீட்டின் சமையலறைக்கு இரவு உணவு சமைப்பதற்காக அடுப்பின் அருகில் சென்ற போது அடிப்பின் அடியில் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.