உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன்படி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள நூற்றாண்டு கிடந்த பழமை வாய்ந்த புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்டனர். தேவாலய பங்குத்தந்தை அதிபர் அருள்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கிறிஸ்துமஸ் விழா குறித்து எடுத்துரைத்து பேசினர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு தேவாலய பங்குத்தந்தை கேக்குகளை ஊட்டிவிட்டு வாழ்த்துதெரிவித்தார். அப்போது பங்குத்தந்தைக்கு இந்து இஸ்லாமிய சமூகத்தினரும் கேக்குகளை ஊட்டிவிட்டு சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவரின் முன்பாக கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.