மதுரை கேகே நகர் பகுதியில் பிஸ்மி உணவகம் என்ற பெயரில் செயல்பட்டுவரும் ஹோட்டலில் சட்டக்கல்லூரி மாணவிகள் கடந்த 31ஆம் தேதி இரவு பார்சல் வாங்கிய சிக்கன் 65க்குள் வண்டு இருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகமடைந்து சிக்கனை பிரித்து பார்த்தபோது சிறிய அளவிலான வண்டு இறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பதாக கூறி உணவகத்திற்கு நேரடியாக எடுத்துசென்று உணவக ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் தரப்பில் முறையான பதில் அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் எதிரொலியாக மதுரை கேகே நகர் பகுதியில் பிஸ்மி உணவகம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது புகாருக்குள்ளான உணவகத்தில் திறந்த வெளியில் தூசு, பூச்சி படும்படி கோழி இறைச்சி பொறிக்கப்படுகிறது, சமையலறை அசுத்தமாக காணப்பட்டது, பணியாளர்கள் கையுறை, தலையுறை அணியவில்லை என கூறி உணவுப்பாதுகாப்பு சட்டம் 55ன் படி புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் உணவக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியதோடு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்றனர்.