கரூர் மாவட்டம் குளித்தலையில் பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் 80 வயதுடைய மூதாட்டி ஜெகதாம்பாள். இவர் வீட்டின் பின்புறம் இன்று மதியம் குப்பையில் யாரோ வைக்கப்பட்ட தீயில் இருந்து அருகில் இருந்த ஜெகதாம்பாள் கூரைவீட்டில் தீ பிடித்து எரிந்து, வீட்டில் இருந்த சிலிண்டரில் தீ பற்றி திடீரென வெடித்ததில் அருகில் தனியாக வசித்து வரும் அகிலாம்பாள் என்பவரின் கூரை வீடும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
வீட்டில் இருந்த மின்கம்பியிலும் தீ பிடித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அந்த நேரத்தில் இரண்டு வீட்டிலும் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் 2 கூரை வீடுகளில் எரிந்து கொண்டிருக்கும் வீட்டின் அருகே மேல் மாடியில் தண்ணீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் வேலையில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொழுந்து விட்டு எரியும் தீயில் தண்ணீர் பீச்சு அடித்ததால் அங்கு பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் புகை மூட்டத்தால் அவதிப்பட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.