கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனீஸ்வரர் திருக்கோவிலானது காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி அமையப்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவானது 8 ஊர் சிவன் ஒன்று கூடி கடம்பன்துறை காவிரி ஆற்றில் நீராடி தீர்த்தவாரி மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். மறுநாள் காலை சாமிகள் புறப்பாடு மற்றும் விடையாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் திருப்பணி காரணமாக மூலவர் தவிர அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் வரும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற உள்ள தைப்பூச திருவிழா நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது என்பதை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது என்ற அறிவிப்பு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், பக்தர்கள் பலரும் திருவிழா நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குளித்தலை கடம்பர் கோவில் தைப்பூச திருவிழாவை ரத்து செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். என்று தைப்பூச விழா குழு மற்றும் 8 ஊர் பொதுமக்கள் சார்பில் குளித்தலை நகரப் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது