கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன், மாயம்பெருமாள், பெரியக்காள், வீரம்மா, மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூன் 4ம் தேதி திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தனம், லட்ச்சார்ஜனை, திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
இன்று காலை இரண்டாம் கால யாகவேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் வேத மந்திரங்கள் உள்ள கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழா கமிட்டியினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.