கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அற நிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 17ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை பட்டாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ம்ருத்ஸங்க்ரஹனம், திருமஞ்சனம் மஹாபூர்ணாஹூதி உள்ளிட்ட ஆறு கால யாக வேலி பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை 6 ஆம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் பட்டாச்சாரியார் புனித நீர் கும்பத்தினை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கலசத்திற்கு புனித நீரினை ஊற்றினர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
ராஜேந்திரம் கிராமத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.