கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி, ஆத்தூர் பிரிவில் புதிதாக புறக்காவல் நிலையம் மற்றும் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இப்புறக்காவல் நிலையத்தை இன்று (டிசம்பர் 28) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவித்தார். பின்னர் அமைச்சர் புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி தலைவர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்புறக்காவல் நிலையத்தில் பொதுமக்கள் காவல்துறையை எளிதில் அணுகும் வண்ணம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, புறக்காவல் நிலையம் மூலம் கண்காணித்து குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.