கரூரில் அயல் நாட்டு மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 25ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து 3:00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், கரூர் மாநகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர். அப்போது, ஈஸ்வரன் கோவில் அருகே மற்றும் கரூர் பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாக அயல்நாட்டு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இந்த மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 50 என்பவரையும், கரூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 48 என்பவரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் ரூ.20,000 மதிப்புள்ள அயல்நாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பின்னர் அவர்களை பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர்.