கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கூட்டரங்கில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் முத்துசாமி, மாநில நிர்வாகிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சங்கப் பொதுச் செயலாளர் குருசாமி வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநிலப் பொருளாளர் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் கௌரவ பொதுச் செயலாளர் மாரிமுத்து நிறைவுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் நெடுஞ்சாலைத்துறையில் திறன்மிகு உதவியாளர்கள் நிலையில் இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையில் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்கும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.