கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து கொடுத்ததாக கூறி 6 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்து கரூர் நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது போலியாக அரசு ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எந்தெந்த இடங்களில் செயல்படும் ஜெராக்ஸ் கடைகளில் இது தயாரிக்கப்பட்டது என்பதை காட்ட சொல்லி, நகரின் மைய பகுதிகளான ராமகிருஷ்ணபுரம், வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடைகளுக்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சேகரிக்கும் பணியில் கரூர் நகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சைபர் கிரைம் போலீசார் இந்த தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இந்த சோதனையின் காரணமாக கரூர் நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.