கரூரில் பண மோசடி வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது.
திருச்சி மாவட்டம், மன்னார்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த எல்பின் ஈகாம் என்ற தனியார் நிறுவனம், முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று திரும்பத் தராமல் ஏமாற்றியது.
இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரில் எல்பின் மேலாண்மை இயக்குனர் ரமேஷ்குமார், நிர்வாக இயக்குனர் ராஜா (எ) அழகர்சாமி உட்பட 30க்கு அதிகமானாரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து இந்நிறுவனத்தின் அசையும் & அசையா சொத்துக்களையும் முடக்கினர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கரூரை சேர்ந்த வினோத்குமார் வயது 47, கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தார்.
இவர் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 500க்கும் அதிகமானவரிடம் இருந்து 20 கோடி முதலீடு வசூலித்துள்ளார்.
மேலும், தற்போது இந்நிறுவனத்தின் பேரில் மீண்டும் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், நேற்று கரூரில் வினோத் குமாரை கைது செய்து, மதுரையில் உள்ள முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.