குட்டை கடை அருகே டூவீலர் மீது கார் மோதி வாலிபர் உயிரிழப்பு.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, சி. புதூரை சேர்ந்தவர் ராஜரத்தினம் வயது 42. இவரது மகன் இளவரசன் வயது 20.
இவர்கள் இருவரும் மார்ச் 26ல் இரவு 11 மணி அளவில், புன்னம்சத்திரம் - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். டூவீலரை ராஜரத்தினம் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் குட்ட கடை பகுதிக்கு வந்த போது,
எதிர் திசையில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சாலப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் வேகமாக ஓட்டி வந்த கார், ராஜரத்தினம் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜரத்தினம் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த அவரது மகன் இளவரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த ராஜரத்தினத்தின் உறவினர் வெங்கடாசலம் என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த ராஜரத்தினத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக, காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.