மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபிஜா ஷெரின் எம்.இ பட்டதாரி. பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாரோடு பகுதியைச் சேர்ந்த அஜய் சாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அபிஜா ஷெரின் பெற்றோரின் 101 தங்க நகைகளும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும், சொகுசு கார் வாங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கூடுதல் வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் குடும்ப வன்முறை ஈடுபட்டதாகவும் அஜய் சாபு குடும்பத்தினர் மீது குழித்துறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அபிஜா ஷெரின் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜய் சாபு, அபிஜா ஷெரினுக்கு மாதம் ரூபாய் 5000 வீட்டுவாடகை கொடுக்க வேண்டும், அஜய் சாபு அவரது குடும்பத்தினரோ அபிஷாவின் மீது எந்தக் குடும்ப வன்முறையும் செய்யக்கூடாது,
மாதாமாதம் பிள்ளைகளுக்குச் சேர்த்து ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும், மேலும் வழக்குத் தொடுத்த காலத்திலிருந்து நிறுவையிலிருந்த ரூபாய் 8 லட்சத்து 80 ஆயிரம் ஜீவனாம்சம் நிலுவைத் தொகை உடனடியாகச் செலுத்த வேண்டும், மன உளைச்சலுக்காக ரூ. 10 லட்சம், தங்க நகைகள் அனைத்தும் உடனடித் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று குழித்துறை மாஜிஸ்திரேட் மோசஸ் ஜெபசிங் தீர்ப்புக் கூறினார்.