தக்கலை அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (61). கொத்தனார். நேற்று முன்தினம் சுந்தர்ராஜ் சாமியார்மடத்திற்குச் செல்வதற்காக மாவுவிளைப் பகுதிச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
புலிப்பனம் பகுதியில் செல்லும்போது திடீரென சுந்தர்ராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சுரேஷும் உட்பட இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் உடனே இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுந்தர்ராஜ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சுரேஷ் மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பலனின்றி சுந்தர்ராஜ் நேற்று (மே 31) இரவு உயிரிழந்தார்.