தக்கலை அருகே உள்ள வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவரது மூத்த மகன் சுஜன் குமார் (18). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வகுப்பறையில் நேற்று காலை 11 மணிக்கு மேல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுஜன் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக சுஜனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சாவுக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.