தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க குமரி மாவட்டக் கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகில் நேற்று நூதன போராட்டம் நடந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,750 மற்றும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நெற்றியில் பட்டை கட்டியும், தட்டுகள் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஹெலன் ரமணிபாய், லீலா, லூயில் மேரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லூக்காஸ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன். பாக்கியதீபா, ஒன்றிய தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜம்மாள் நன்றி கூறினார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.