மத்திய அரசு கடந்த மாதம் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இடம் பெறாத வகையில் உள்ளது என்ற குற்றசாட்டை முன்வைத்தும், நிதிநிலை அறிக்கையை கண்டித்தும் இன்று இடதுசாரிகள் அமைப்பினர் தமிழக முழுவதும் சாலை மறியல் போராட்டங்களை அறிவித்து நடத்தினர்.
அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் என பல்வேறு தோழமைக் கட்சிகளான இடதுசாரி அமைப்புகள் சேர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
திடீரென வேப்பமூடு சந்திப்பிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்து அங்கு சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தபோது போராட்டக்காரர்களுக்கும்,
போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.