குளச்சல் நகராட்சியில் தூய்மை பணி செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்துள்ளதாக கூறப்படும் இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றின் பிடித்தம் செய்துள்ள ரசீதுகள் வழங்க வேண்டும்,
கலெக்டர் ஆணைப்படி தின கூலி ரூ. 730 சம்பளம் கேட்டுக் கொள்வது, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதி தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன் கடந்த 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சுமூக முடிவு ஏற்படாததால் மீண்டும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று (மார்ச் 26) காலை நகராட்சி உரக்கிடங்கு முன்பு அமர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர ஏஐசிசிடியு தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார்.
செயலாளர் பீட்டர், துணை செயலாளர்கள் பிரமிளா, ஹதீஸ் உட்பட 26 பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏஐசிசிடி தேசிய துணை தலைவர் எஸ்.எம். அந்தோணி முத்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். குளச்சல் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.