நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் திமத்தியூஸ் (73 ). இவர் மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பிள்ளைகள் திருமணம் ஆகி வேறு வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் திமத்தியுஸ் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இவரது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, திமத்தியூஸ் அழுகிய நிலையில் கட்டிலில் சடலமாக கிடந்தார்.
விசாரித்ததில், அக்கம் பக்கத்தினர் கடந்த மூன்றாம் தேதிக்கு பிறகு அவரை வெளியில் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.