கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 54). இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். மனோகரன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டுக்குச் செல்லாமல் சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பணம் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பித் தராததால் மனோகரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.