செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர், வல்லம் ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில், சாலையின் அருகில் வணிக நிறுவனங்களின் கடைகள் அதிகமாக உள்ளன. இங்கு, கடைக்கு வரும் நுகர்வோர் சாலையிலேயே, வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்சென்று, மதுராந்தகம் அடுத்த, சிதண்டிமண்டபம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ஏற்றிச்செல்கின்றனர்.
இந்த லாரிகள், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் நுழைவாயில் பகுதியில் செல்கிறது. அப்போது, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அணிவகுத்து சாலையில் நிற்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து ஏற்பட்டு, அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதைத் தவிர்க்க, ரயில் நிலையத்தில் இருந்து வரும் லாரிகள், செங்கல்பட்டு ஆலன்சாலை வழியாக சென்று, மதுராந்தகம் சென்றால், போக்குவரத்து நெரிசல் குறையும்.