திருக்கழுக்குன்றம் மலைக்குன்றில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு, 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 15 கோடி ரூபாய் கேட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது.
அவரது ஆசியுடன், அவை மலைக் குன்றுகளாக வீற்றன. ஒன்றின் உச்சிப் பகுதியில், சுயம்பு மலைக்கொழுந்தாக வேதகிரீஸ்வரரும், தனி சன்னிதியில் சொக்கநாயகியும் வீற்றுள்ளனர்.
வடக்கு சுவரில் யோகதட்சிணாமூர்த்தியும், தெற்கு சுவரில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
இந்திரன், குன்றில் இடியாக விழுந்து வழிபட்ட, லிங்க வழிபாட்டு சின்னம் காணப்படுகிறது. இதை, மகேந்திரவர்ம பல்லவன் அமைத்துள்ளார்.
சுவாமியின் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், குன்று கோவிலின் தென்மேற்கில், நிலப்பகுதியில் பக்தவச்சலேஸ்வரருடன் வீற்றுள்ளார்.
இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை பெருவிழா, ஆடிப்பூரம் போன்ற முக்கிய உற்சவங்கள், தலா 10 நாட்கள் நடக்கின்றன.
வேதமலைக் குன்றுகள், 3 கி. மீ. , சுற்றளவில் விரிந்துள்ளன. இப்பகுதி மற்றும் சுற்றுப்புற பக்தர்கள், பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று, இறைவனை தரிசித்து வழிபடுகின்றனர்.
கோவில், மலைக்குன்று அடிவாரத்திலிருந்து, 300 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது.
கீழிருந்து குன்றின் மேல் செல்ல, 560 படிகள் உள்ளன. முதியோர், பெண்கள், சிறுவர்கள் படியில் ஏற இயலாமல் சிரமப்படுகின்றனர். கோவில் ஊழியர்கள் கோவிலுக்கு சென்று திரும்ப தாமதமாகிறது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியும் சிக்கலாக உள்ளது.
பக்தர்கள் உடல் நலன், வழிபாடு முக்கியத்துவம் கருதி, வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்ல, 'ரோப் கார்' அல்லது மலைக்குன்றில் வாகன பாதை அமைக்க, பக்தர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
மலைக்குன்றின் உச்சிப்பகுதி குறுகியதாக உள்ளதால், 'ரோப் கார்' இயக்கம் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் ஆர்வம் காட்டாமல், வாகன பாதை அமைக்கவே, சில ஆண்டுகளுக்கு முன் பரிசீலித்தது.
தற்போதைய தி. மு. க. , அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர் சேகர்பாபு, 'திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு 'ரோப் கார்' இயக்கப்படும்' என அறிவித்தார்.
அதன் பின், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, 'இட்காட்' நிறுவனம், 11. 97 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொண்டது.
ஆய்வுப் பணிகளை அமைச்சரும் பார்வையிட்டார். ஆய்வின் முடிவில், 'ரோப் கார்' வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், திருக்கழுக்குன்றம் மலையில் உள்ளதாக, நிறுவனம் தெரிவித்தது.
மலைக்குன்றின் மேற்கில், செங்கல்பட்டு சாலை அடிவார பகுதியிலிருந்து, 'ரோப் கார்' இயக்கும் தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்க, மண் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், 'ரோப் கார்' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக்கோரி, அரசிடம் பரிந்துரைக்க முடிவெடுத்திருப்பதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி செல்ல, 'ரோப் கார்' இயக்குவதாக, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார். தற்போது, திட்டத்திற்கு மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைப்போம். ஒப்புதல் அளித்ததும், பணிகளை துவக்க தயாராக உள்ளோம்.