செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் குளமான சுத்த புஷ்கரணி குளத்தில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம், ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தெப்ப உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை, உற்சவர் பிரகலாதவரதர், முரளி கண்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு மேல் மாட வீதிகளில் மங்கள இசை முழங்க வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இதில் சிங்க பெருமாள் கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை இரண்டாம் நாள் உற்சவம் நடைபெற உள்ளது.