வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் -- பழவேரி பாலாற்றின் குறுக்கே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயத்திற்கு பாசன ஆதாரமாகவும், அருங்குன்றம், பட்டா, பழவேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
கடந்த மே மாதத்தில் பெய்த கோடை மழைக்கே இந்த தடுப்பணை நிரம்பி வழிந்தது. அதை தொடர்ந்து, தடுப்பணையில் எப்போதும் நீர் இருப்பு இருந்தது.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்யாற்றில் நீர்வரத்து காரணமாக தடுப்பணை நிரம்பி வழிந்தது.
அதையடுத்து, செய்யாறு மற்றும் பாலாற்றின் நீர்வரத்தால், இரண்டு வாரமாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.