செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் ரயில் தடத்தில், வில்லியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது.
இந்த ரயில் நிலையத்தை வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், சீத்தனஞ்சேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு கூரைகள், இருக்கைகள் போன்றவை இல்லை.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
தினமும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து, 1, 000க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
ஆனால், இந்த ரயில் நிலைய வளாகத்தில், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் போதிய அளவுக்கு இருக்கைகள் மற்றும் கூரைகள் இல்லை. மழை மற்றும் வெயில் காலங்களில் பயணியர் அவதிப்படுகின்றனர்.
ரயில்வே நடைபாதை முழுதும் புதர் மண்டியும், பல இடங்களில் நடைபாதைகள் உடைந்தும் இருக்கின்றன. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சத்துடனேயே, பயணியர் ரயிலுக்காக காத்திருக்கின்றனர்.
எனவே, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.