செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த முகுந்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கரிகந்தாங்கல் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள நூலக தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை பழுதடைந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்ததால், ஊராட்சி சார்பாக புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழுதடைந்த சிமென்ட் சாலை, இரண்டு மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது.
ஆனால், மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல், சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது வரை சாலைப் பணி துவங்கப்படாத நிலையில், தோண்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கழிவுகளும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள், கான்கிரீட் கழிவுகள் மீது நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கரிகந்தாங்கல் சிமென்ட் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.