திருப்போரூர் கோயிலில் சுவாரசிய சம்பவம்

73பார்த்தது
திருப்போரூர் கோயிலில் சுவாரசிய சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, அம்பத்தூர், விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் போது, தன்னுடைய 'ஐபோன் 13 புரோ' ரக மொபைல்போனையும், தவறி போட்டுள்ளார். அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கோவில் நிர்வாகத்தினர், கோவில் உண்டியலில் செலுத்தப்படும் அனைத்தும் சுவாமிக்கு சொந்தம் எனக் கூறியுள்ளனர். 

மேலும், மொபைல் போன் தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை உயரதிகாரிகளிடம் மனு கொடுத்து கேட்கலாம் எனக் கூறிய நிர்வாகத்தினர், உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் அளிப்பதாக கூறி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 20) அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. முன்னதாக, தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வந்திருந்தார். உண்டியலை திறந்து பணத்தை எடுத்த போது, அவரது மொபைல்போனும் அதில் இருந்தது. அப்போது தினேஷ் மொபைல் போனை கேட்டுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'உண்டியலில் போட்டவை முருகனுக்கு சொந்தம். மொபைல் போனை தர முடியாது' எனக் கூறியுள்ளனர். பின் அந்த மொபைல்போன், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி