மகேந்திரா சிட்டி -- செட்டிப்புண்ணியம் சாலையை, செட்டிப்புண்ணியம், வடகால், வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையின் ஓரம் உள்ள மின் கம்பங்களில், செட்டிப்புண்ணியம் ஊராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், மொத்தம் உள்ள 35 மின் கம்பங்களில், மலை மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள 15 மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவதில்லை. மேலும், மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வேலைக்கு சென்று திரும்பும் செட்டிப்புண்ணியம், வடகால் கிராமத்தை சேர்ந்த பெண்கள், இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து செல்கின்றனர்.
பல இடங்களில் விளக்குகள் எரியாததால், அவர்கள்அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. மேலும், இந்த சாலை, ஒரு கி. மீ. , துாரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ளதால், வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
எனவே, பழுதாகி எரியாமல் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.