காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி 1வது வார்டில், வெள்ளேரியம்மன் கோவில் பகுதி உள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து, வெள்ளேரியம்மன் கோவில் வழியாக கிதிரிப்பேட்டை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், ரயில்வே நிலையம் பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளுக்கு முன் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டன.
ஒரு அறை கொண்ட 10 கட்டடங்கள் தனி, தனியாக ஏற்படுத்தப்பட்டு, அவை குத்தகைக்கு விடப்பட்டு பல்வேறு கடைகள் அச்சமயம் செயல்பட்டு வந்தன. பின், நாளடைவில் அக்கட்டடங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லமால் வீணாகி வருகிறது.
இதனால், பேரூராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அக்கட்டட பகுதிகள், செடிகள் வளர்ந்தும், சமூக விரோதிகள் புகலிடமாகி வருவதாகவும் அப்பகுதியினர் பலரும் புகார் கூறி வருகின்றனர்.