உத்திரமேரூரில் மதுக்கூடமாக மாறிய ஊராட்சி சேவை மையம்

76பார்த்தது
உத்திரமேரூரில் மதுக்கூடமாக மாறிய ஊராட்சி சேவை மையம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், ஒட்டந்தாங்கல் ஊராட்சியில், பூந்தண்டலம், ஓட்டந்தாங்கல், ஆதிதிராவிடர் குடியிருப்பு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள ரேசன் கடை அருகே, ஊராட்சி சேவை மையம் இயங்கி வருகிறது. 

இந்த மையத்தை பயன்படுத்தி, அப்பகுதி வாசிகள் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊராட்சி சேவை மைய கட்டடத்தில், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். பின், மது அருந்திவிட்டு மது பாட்டில், காலி வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை, அங்கேயே வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், ஊராட்சி சேவை மைய கட்டடம் மதுகூடமாக மாறி வருகிறது. 

மேலும், தினமும் காலை அப்பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் அமர்ந்து, மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி