செங்கல்பட்டு மாவட்டம், கொக்கிலமேடில், இருதரப்பு மீனவர்களுக்கிடையே சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பைச் சேர்ந்த மீனவ குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, கொக்கிலமேடு மீனவ கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜாத்தி மற்றும் 7 மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மீனவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி., வேல்முருகனிடம் மனு அளித்தனர்.
அதில், மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியில், கழிவுநீர் கால்வாயை உயர்த்தி கட்டியது தொடர்பாக, மீனவர் வெங்கடேசன் மனைவியான, ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்தி மற்றும் 7 மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த எங்களிடம், எதிர் தரப்பு மீனவர்கள் தகராறு செய்தனர். அதன் பின், கடந்த 17ம் தேதி, ராஜாத்தியின் ஆதரவாளர்களான எங்களின் வீடுகளை, எதிர் தரப்பு மீனவர்கள் சேதப்படுத்தினர்.
இதனால், தங்க இடமின்றி உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகிறோம். பள்ளி, கல்லூரிக்கு எங்கள் குழந்தைகள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எங்கள் வீடுகளுக்குச் சென்று வசிக்க, போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட ஏ.டி.எஸ்.பி., வேல்முருகன், "மாமல்லபுரம் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் தெரிவித்து விட்டு, வீடுகளுக்குச் செல்லலாம், என, மீனவர்களிடம் தெரிவித்தார்.