காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, பள்ளம்பாக்கம் கிராமம் வழியாக, புள்ளலுார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. பள்ளம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்துக் கால்வாய் குறுக்கே, தரைப்பாலம் செல்கிறது.
இந்த தரைப்பாலம், இரு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து, பள்ளம் விழுந்திருந்தது. இதை, ஒரு அடி உயரத்திற்கு சிமென்ட் ஜல்லி கலவை கொட்டி, கடந்த ஆண்டு சீரமைத்தனர். இருப்பினும், சாலை இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தவில்லை.
இதனால், கொட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, பள்ளம்பாக்கம் கிராமம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, கொட்டவாக்கம் - பள்ளம்பாக்கம் சாலை குறுக்கே செல்லும் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.