செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே 5 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை
புதுச்சேரி மாநிலத்திலிருந்து சென்னை அண்ணாநகர் பகுதிக்கு கார் மூலம் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் ஏராளமான புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பதே தெரிய வந்தது. தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42), என்பதும் வரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் இருந்து 5-லட்சம் மதிப்பிலான ஃபுல் மதுபான பாட்டில்களை கடத்திக்கொண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது.
தொடர்ந்து தாமோதரனை கைது செய்த விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.