செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், சின்னக்குப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகள் உள்ளன. இப்பகுதி மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் மீன்பிடி தொழில் மேம்பாடு கருதி, மீன்வளத்துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், பெரியகுப்பத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்குதளத்தை, 12 ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. மீனவர்கள் அளித்த இடத்தில், இத்தளம் அமைக்கப்பட்டது.
முதல்கட்டமாக, மீன் ஏலம், வலைபின்னல் கூடங்கள், வலை பாதுகாப்பு கூடங்கள், வங்கி கட்டடம் ஆகியவை அமைக்கப்பட்டன. அதோடு, 2 கோடி ரூபாய் மதிப்பில், மீன் பதப்படுத்துதல், குளிர்பதன கிடங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட இருந்தன. இந்நிலையில், கடலரிப்பு காரணமாக, மீன் இறங்கு தள வளாகம் வரை கடல்நீர் புகுந்து, சுற்றுச்சுவர் கடலில் அடித்துச்செல்லப்பட்டது. கடலரிப்பு அதிகரித்து, கடல்நீர் புகுவது அதிகரித்து, இத்தளத்தில் உள்ள கட்டடங்கள் அலைகள் தாக்கி சேதமடைந்தன.