செங்கல்பட்டு, கிளாம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள், அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பல்வேறு விளம்பர பலகைகள் மற்றும் அரசியல் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உச்ச நீதிமன்றமும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள் அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கிளாம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள், அரசியல் கட்சி பேனர்களை நகராட்சி அலுவலர்கள், போக்குவரத்து காவலர்கள் உடன் இணைந்து அகற்றினர்.
இதன்மூலம் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என போக்குவரத்து காவலர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் அனுமதியில்லாமல் விளம்பர பேனர்கள், பெயர் பலகை, அரசியல் கட்சி பெயர்கள் பலகைகள் வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.