மவுன்ட், தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும், பரங்கிமலை ரயில் நிலைய முகப்பில் குப்பை குவிந்து, கடும் துர்நாற்றம் வீசுவதால், பயணியர் அதிருப்தியுடன் செல்கின்றனர்.
சென்னை கடற்கரை- - தாம்பரம் இடையே மின்சார ரயில் மார்க்கத்தில், மவுன்ட் ரயில் நிலையம் பிரதானமாக விளங்குகிறது.
மவுன்ட், ஆலந்துார், பட்ரோடு, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், பழவந்தாங்கல், உள்ளகரம்-, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், மூவசரம்பட்டு, கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தினசரி மவுன்ட் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை -கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், திருவான்மியூர், வேளச்சேரி வழியாக மவுன்ட் ரயில் நிலையம் வரை, மேம்பால ரயில் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மவுன்ட், ஆலந்துார், அசோக்நகர், வடபழநி வழியாக கோயம்பேடு செல்லும், மெட்ரோ ரயில் சேவையும் இயங்கி வருகிறது. இதனால், மவுன்ட் ரயில் நிலையம் முக்கியத்துவம் பெற்றது.
இதையடுத்து, மவுன்ட் -மேடவாக்கம் சாலையில் அமைந்துள்ள பரங்கிமலை ரயில் நிலைய முகப்பு பகுதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டது.
ஆனால், ரயில்வே நிர்வாகம் அதை முறையாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில், தெருவோர கடைக்காரர்களின் உணவுக்கூடமாக மாறிவிடுகிறது.
அத்துடன், இங்கு உணவு எச்சங்களை உண்ண வரும் நாய்கள், மாடுகளின் கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. முகப்பில் உள்ள சிறு பூங்கா பராமரிப்பின்றி, பல மின் விளக்குகள் மாயமாகி, காட்டுச் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இது பயணியரை முகம் சுளிக்க வைக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்தினர், பரங்கிமலை ரயில் நிலைய முகப்பு பகுதியை, முழுமையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.