கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஏரியை துார் வாருதல் மற்றும் ஏரியின் கரையை பலப்படுத்தி, நடைபாதைகள் மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் சார்பில், நபார்டு வங்கி உதவியுடன், 6. 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை, பொதுப்பணித்துறை வாயிலாக, ஒப்பந்ததாரர் செய்து வந்தார்.
நிர்வாகத்திற்கு புகார்
இந்நிலையில், கடந்த மாதம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டதாக, ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். ஆனால், பணிகள் நிறைவு பெறவில்லை என்றும், செய்துள்ள பணிக்கு இவ்வளவு தொகை செலவாகியிருக்க வாய்ப்பில்லை என்றும், அப்பகுதி சமூக நல ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று மாலை 4: 30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், ஏரியில் செய்யப்பட்டுள்ள பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, பொதுப்பணித்துறை அதிகாரி குஜராஜ், நகராட்சி கமிஷனர் தாமோதரன், நகராட்சி தலைவர் கார்த்திக் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
அப்போது, ஏரியில் செய்யப்பட்டுள்ள எந்த பணியும் முடிவுறவில்லை என்றும், பணிகளின் தரம் சரியில்லை என்றும், கலெக்டர் அருண்ராஜ், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை கடுமையாக கண்டித்தார்.