முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, ஒரு வாரம் தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதேபோல், தமிழக அரசும் ஜனவரி 1ம் தேதி வரை, துக்கதினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
தேசிய துக்கநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலையில், அமைச்சர் சாமிநாதன் தலைமையில், நேற்றுமுன்தினம் அரசு விழா நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் தலைமையில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 42வது வார்டில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தை எம்.எல்.ஏ திறந்து வைத்தார். மேலும், விளக்கடி கோவில் தெருவில், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவற்றையும் திறந்து வைத்து, இனிப்பு வழங்கினார். மாநகராட்சியின் 29வது வார்டில், 19 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தேசிய துக்கதினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கட்டடங்களை திறந்து வைப்பதும், அடிக்கல் நாட்டுவதும் போன்ற அரசு நிகழ்ச்சிகளால் சர்ச்சை எழுந்துள்ளது.