செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்காமலை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூர் ஏரி நடுவே அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் கிணற்றில் இருந்து, மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வழியாக கிராம மக்களுக்கு தினமும் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருந்தது.
பருவமழை காரணமாக தண்ணீர் நிரம்பி, ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நேற்று திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து உள்வாங்கி தரைமட்டமானது. இதில், கிணற்றில் இருந்த மின்மோட்டார் மற்றும் குழாய்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பாக, வேறு குடிநீர் கிணற்றில் புதிய மின்மோட்டார் பொருத்தி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.