கள்ளபிரான்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், மண்டப குளம் அருகே நடப்பட்ட மரக்கன்றுகள், காய்ந்து கருகி வீணாகி வருகின்றன.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2020- - 21ம் நிதி ஆண்டில், 1. 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொருளாதார பயன் தரும் மரக்கன்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.
மா, கொய்யா, நாவல், இலுப்பை, மூங்கில், பூவரசு மற்றும் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தன.
தற்போது, கோடை வெயிலின் காரணமாக, தண்ணீர் பாய்ச்சப்படாமல், உரிய பராமரிப்பு இன்றி காய்ந்து கருகி வீணாகி உள்ளன.
பெரும்பாலான மரக்கன்றுகள் காய்ந்து கருகி வீணாகி விட்டன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மினி டேங்க், உடைந்து காணப்படுகிறது.
எனவே, மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.