செய்யூர் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த ஏரி வாயிலாக, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகிறது.
இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், மணிலா, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது. சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
விராலுார், புத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக செய்யூர் ஏரிக்கு வந்தடைகிறது. செய்யூர் ஏரியில் இருந்து கலங்கல்கள் மற்றும் மதகுகள் வழியே உபரிநீர் வெளியேறி, கால்வாய் வாயிலாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது.
இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்தில் ஏரியில் போதிய நீரை தேக்க முடியாமல் வீணாக தண்ணீர் வெளியேறுகிறது.
மேலும், உபரிநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வயல்வெளியில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைகின்றன. மேலும், ஏரியின் கரைப்பகுதியில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரைகள் பலவீனமாக உள்ளன.