சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில் உள்ள குளக்கரை தெருவில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன், சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த, குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து சேதமடைந்தது. பின், உடைந்த குழாய் இணைப்பின் மேலேயே, ஊராட்சி சார்பாக சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
நாளடைவில், குழாய் இணைப்பில் உடைப்பு பெரிதாகி, தற்போது அதிக அளவில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், அப்பகுதிவாசிகளுக்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் அளவு குறைந்து வருவதாககூறப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள தண்ணீர் குழாய் இணைப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.