செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் பாரதியார் பிரதான சாலை, எஸ். வி. எஸ். , நகரில் வசித்து வருபவர் லட்சுமணன், 63.
இவர், தமிழக அரசு குடிநீர் வடிகால் வாரியத்தில் செயற் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி எழில்சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, திருவண்ணாமலையில் உள்ள தன் மகள் வீட்டிற்கு, கடந்த மாதம் 29ம் தேதி சென்றனர்.
நேற்று, திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி, எழில் சித்ரா மட்டும் மேல்மருவத்துார் வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, மேல்மருவத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 108 சவரன் நகை, 3. 10 லட்சம் ரூபாய் திருடு போய் இருந்தது.
மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து, மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.