காஞ்சிபுரம் மாநராட்சிக்கு கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையின்போது சேதமானது.
இப்பாலம் சேதமானதால், தாட்டித்தோப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 1, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 2 கி. மீ. , துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, புதிய பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சியின் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 2. 29 கோடி ரூபாய் மதிப்பில், கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமானப் பணிக்காக, கடந்த ஜூலை 6ல் அமைச்சர் அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
பூமி பூஜை போடப்பட்டு, 3 மாதங்களாகியும் பாலம் கட்டுமானப் பணி துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மீண்டும் கன்னிகாபுரம் -தாட்டித்தோப்பு இடையே
போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் போர்க்கால அடிப்படையில் பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.