காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை, ராஜன் நகரில், மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து, மேடு பள்ளங்களாக மாறி இருந்தது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க ஜல்லி கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது.
அடுத்தகட்ட பணியை துவக்காமல், சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லிக்கற்கள் மீதும் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.
காலணி அணியாமல் நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலை சீரமைப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என, ஓரிக்கை ராஜன் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.