செங்கல்பட்டு மாவட்டம் வீரபோகம் ஊராட்சியில், 1, 000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வீரபோகம் காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்கள், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் சாலை இல்லாததால், கடும் அவதிப்படுகின்றனர்.
சாலை இல்லாததால், நெல் மற்றும் வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள தனிநபர்களுக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக, உடலை எடுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது.
எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மயானத்திற்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீரபோகம் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளாக, வயல்வெளிக்கு நடுவே உள்ள 10 சென்ட் இடத்தை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். அரசு சார்பாக எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரப்பட்டுள்ளது.
ஆனால், சாலை வசதி இல்லாததால், உடல்களை அடக்கம் செய்ய கடும் அவதிப்படுகிறோம்.
மயானம் உள்ள பகுதி 20 ஆண்டுகளுக்கு முன் தவறுதலாக, தனி நபர்களின் மீது பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பட்டா உரிமையாளர்கள், நிலத்தை மயானத்திற்கு மாற்ற ஒப்புதல் அளித்துள்ளனர்.
சாலை அமைக்க வேண்டி, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.