uகாஞ்சிபுரம் மாநகராட்சி, திருவீதிபள்ளம் எம். ஜி. ஆர். , நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், 2010ல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இரு ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்தது. இதனால், பழைய மேல்நிலை தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன், பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை தொட்டியை இடிக்கும் பணி துவக்கப்பட்டு, அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகில் உள்ளவர்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம். ஜி. ஆர். , நகர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.