மாமல்லபுரம் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. அதை சார்ந்து, பயணியர் விடுதிகள், கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகள், சிற்பக் கூடங்கள் மற்றும் பிற கடைகள் இயங்குகின்றன.
இப்பகுதி சுற்றுலா சிறப்பினை கருதி, இங்கு தடையற்ற மின்சாரம் அவசியம். ஆனால், முன்னறிவிப்பு இன்றி, பகல், இரவு என, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறை துண்டிப்பின்போதும், அரை மணி நேரம் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும் மின் தடை காரணமாக, இப்பகுதியினர் அவதிக்குள்ளாகின்றனர்.
வியாபாரம், தொழில்கள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. நாட்டிய விழா, பிற சர்வதேச நிகழ்வுகளின்போது மட்டும், தடையற்றமின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில், பாதிப்பு அதிகரிக்கிறது.
சில நாட்களாக, தொடர்ந்து மின் தடைஏற்படுகிறது. தனியார் தொலைதொடர்பு நிறுவனம், மின்சார கேபிளை சேதப்படுத்தியதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின் தடை பாதிப்பை தவிர்க்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.