காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர், அரும்புலியூர், ஆத்தங்கரை, குருமஞ்சேரி, களியப்பேட்டை, கரும்பாக்கம், உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் விவசாயிகள் அதிக அளவு கரும்பு பயிரிடுகின்றனர்.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்யப்படும் மொத்த கரும்புகளில், 40 சதவீதம், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் கரும்புகளாக உள்ளன. கரும்பில் இருந்து மாற்று பயிர் சாகுபடிக்கு காரணமாக ஆட்கள் தட்டுப்பாடு, கட்டுப்படியாகாத விலை போன்றவற்றை கூறிவந்த நிலையில் தற்போது அவைகளை தாண்டி காட்டுப் பன்றி தொந்தரவு முக்கிய காரணியாக உள்ளது. கடந்த ஆண்டுகளில், இங்குள்ள சாத்தணஞ்சேரியில் மட்டும் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்ட நிலையில், இந்த ஆண்டு சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் மொத்தமாக 300 ஏக்கரில் மட்டும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது பாதி வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் கரும்பு தோட்டத்திற்குள் கூட்டமாக புகுந்திடும் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகின்றன.